தமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் தகுதியுள்ள மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் B.E., B.Tech., B.Arch., படிப்புகளில் சேர https://tneaonline.org/ என்கிற இணையதளத்தில் பள்ளிகள் வாயிலாகவும், மாநிலம் முழுவதும் உள்ள சிறப்பு மையங்கள் வாயிலாகவும் கடந்த 27ந்தேதி வரை விண்ணப்பித்தனர். 2,11,905 மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர மொத்தமாக விண்ணப்பித்துள்ள நிலையில், அவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று தொடங்கும் பொறியியல் கலந்தாய்வு சான்றிதழ் சரிபார்ப்பில் வரும் 7ஆம் தேதி வரை விளையாட்டுப் பிரிவினருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது. இதில், பங்கேற்க 2,442 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் 250 பேர் என்ற அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்த உள்ளது. இதையடுத்து சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நடைபெறும் பின்னர் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 22ஆம் தேதி தொடங்கும் உயர்க்கல்வித் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.