நண்பர்களே.. இந்தக் காட்சியை நினைத்துப் பாருங்கள்… உடல் நடுங்கும், உள்ளம் பதறும்!
அந்தப் பெண் குழந்தைக்கு ஆறு அல்லது ஏழு வயது இருக்கும். அவளைச் சில பெண்கள், உள் அறைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அந்தப் பெண் குழந்தையின் ஆடைகள் அவிழ்க்கப்படுகின்றன. குழந்தைதானே… தவிர, உடன் அம்மாவும் குடும்பப் பெண்களும் இருக்கிறார்கள் என்பதால் சங்கோஜமில்லை.
இப்போது, அந்தக் குழந்தையின் கைகால்களைச் சில பெண்கள் இறுகப் பிடிக்கிறார்கள்… குழந்தையின் பிறப்புறுப்பின் ஒரு பகுதி பிளேடால் வெட்டப்படுகிறது…
குழந்தை வலியால் கதற.. அதன் வாய் பொத்தப்படுகிறது. துள்ளத் துடிக்கிறது குழந்தை! உடல் ரணம் மட்டுமல்ல.. வாழ்நாள் முழுதும் மனதில் வலி இருக்கும் அல்லவா? அது மட்டுமல்ல.. வாழ்நாள் முழுதும் உடல் வேதனையும் இருக்கும்!
நீதிமன்றத்தின் கதவைத் தட்டும் நியாயம்
இந்தியாவில் ஒரு மதப் பிரிவினர் இந்த வழக்கத்தைத் தெய்வத்தின் பெயரால் செய்கின்றனர். அவர்கள், “எங்களது மத நடைமுறை” என்கின்றனர்.
ஆனால் இதே மதப் பிரிவைச் சேர்ந்தவர்கள் பலர், இப்போது இந்தக் கொடூரத்தை எதிர்த்துப் போராட ஆரம்பித்து இருக்கிறார்கள் – குறிப்பாகப் பெண்கள்! அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்து உள்ளனர்!
இந்த வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதி, இது ஒன்பது நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மதச் சுதந்திரம் (பிரிவு இருபத்தைந்து), குழந்தைகளின் உடல் பாதுகாப்பு மற்றும் கண்ணியமான வாழ்விற்கான உரிமையைப் பறிக்கலாமா என்பதே இந்த வழக்கின் மையக் கருத்தாகும்.
ஆனால் நீதிபதிகளில் சிலர், “மதச் சடங்குகளைத் தர்க்கரீதியாகவோ அல்லது அறிவியல் பூர்வமாகவோ மட்டுமே அணுகிக் கேள்வி எழுப்பலாமா.. அப்படி நடந்தால் பல நூற்றாண்டுகளாக நிலவும் மதக் கட்டமைப்பையும் நாகரிகத்தையும் சீர்குலைத்துவிடக்கூடும்” என்று கவலை தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அதே சமயம், “ஒரு பெண்ணின் கண்ணியம் மற்றும் உடல் நலம் தொடர்பான விவகாரங்களில் சமரசம் செய்ய முடியாது என்றும், குழந்தைகளின் உரிமைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்” என்றும் கருத்துத் தெரிவித்தது கொஞ்சம் நம்பிக்கையை அளித்துள்ளது.
மனித உரிமை மீறல்
இன்னொரு விஷயம், இந்தக் கொடூரத்தை மத ரீதியாகப் பார்க்க வேண்டியது இல்லை என்பதுதான். தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கும் அதே மதப்பிரிவினர், “இந்தச் சடங்கு செய்ய வேண்டும் என எங்கள் மதப் புனித நூலில் சொல்லப்படவில்லை” என்கிறார்கள்.
தவிர, வெவ்வேறு மதப் பிரிவைப் பின்பற்றுபவர்களிடமும் இந்தக் கொடூரச் சடங்கு நிலவுகிறது. சோமாலியா, எகிப்து, மாலி, சூடான், காம்பியா, எத்தியோப்பியா, நைஜீரியா, கென்யா, செனகல், தான்சானியா, ஏமன், ஈராக், ஓமன் எனப் பல நாடுகளிலும் இந்தப் பரிதாபம் நடக்கிறது.
சட்டத்தால் வீழ்த்தப்பட்ட மூடநம்பிக்கைகள்
ஐரோப்பாவில் ஒரு காலத்தில், குறிப்பிட்ட பெண்ணை மந்திரவாதி, “சூனியக்காரி” எனச் சொல்லிவிட்டால் அவளைக் கல்லால் அடித்தே கொல்லும் வழக்கம் இருந்தது. பதினேழு முப்பத்தைந்தில் பிரிட்டனில் சட்டம் போட்டு இதைத் தடை செய்தார்கள். ஏன், கணவன் இறந்தால் மனைவியைக் கொல்வது உள்ளிட்ட எத்தனையோ மூடநம்பிக்கைகள் நம்மிடையே இருந்தன. அவை சட்டம் மூலம் தடை செய்யப்பட்டனவே!
ஆணாதிக்கத்தின் உச்சகட்ட வன்முறை
இன்னொரு பக்கம், சிறுமிகளின் பெண்ணுறுப்பை அறுக்கும் சடங்கு குறித்து அந்த மதப் பிரிவைச் சேர்ந்தவர்களும், இது குறித்து ஆய்வுகள் செய்த சமூகவியல் அறிஞர்களும் கூறும் கருத்து இன்னும் அதிர வைக்கிறது. “இப்படியான ‘சடங்கினை’ சிறுமிகளுக்குச் செய்துவிட்டால், பிற்காலத்தில் உடலுறவில் ஈடுபடும்போது கடும் வலி ஏற்படும். உடலுறவின் மீது நாட்டம் ஏற்படக்கூடாது என்பதாலேயே இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டது!” என்கிறார்கள்.
பசி, தாகம் போல இயற்கையான உணர்வுதான் உடலுறவு. சந்ததியைப் பெருக்க அவசியமான இதை, ஆணுக்கானதாக மட்டும் வைத்துப் பெண்ணைக் கொடுமைப்படுத்துவது என்னவொரு ஆணாதிக்கம்! தவிர, சிறுமிகளுக்கு இதுபோலச் செய்யும்போது அதன் பாதிப்பு வாழ்நாள் முழுதும் தொடரும். பிரசவத்தின் போது மரணம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
மாற்றம் ஒன்றே தீர்வு!
இன்னொரு பக்கம் நம்மிடையேயும் மாற்றம் வேண்டும். காதல், திருமணம், உறவு ஆகியவற்றில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சரிசம பங்கு உண்டு. ஆனால் இங்கே நடப்பது என்ன..
“என் அண்ணன் கெத்துல்ல.. என் அண்ணிய லவ் பண்ணி தூக்கிட்டு வந்துட்டாரு” என்கிற அதே நபர், “என் அக்காவப் பத்திப் பேசாதே.. ஓடிப்போயிட்டா!” என்று வெறுப்பதைப் பார்க்கிறோம்.
” என் அப்பா கில்லாடி!” என பெருமையாக!) சொல்லும் நபர், தன் அம்மாவின் உணர்வுகளை நினைத்துக் கூட பார்ப்பதில்லை.
ஆணுக்கு நிகரானவளே பெண் என்பதை சமூகம் உணர வேண்டியது அவசியம்!