தமிழக தேர்தல் முடிவு வெளியாகி, ஆட்சி அமைக்கும் முயற்சிகள் போய்க்கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில், தேர்தல் – கட்சி அரசியலைக் கடந்து நாம் ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி பேசியே ஆக வேண்டும்.
தற்போதைய தமிழக சட்டமன்றத்தில், பல்வேறு கட்சிகள் சார்பாக, 23 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியிருக்கிறார்கள். இது வரவேற்கத்தக்கது. ஏற்கனவே 2011, 2016 ஆகிய ஆண்டு தேர்தல்களில் இதைவிட அதிகமாக பெண்கள் சட்டமன்றத்துக்குள் வந்தார்கள். ஆனாலும் இது 234 சட்டமன்ற இடங்களில் 10 சதவீதம்தான்.
வாக்காளர் பலம்: 51% – அதிகாரப் பங்கு: வெறும் 10%!
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா. மொத்த வாக்காளர்கள் சுமார் 98 கோடி. தமிழ்நாட்டில் 5.73 கோடி. இவர்களில் 2.93 கோடி பேர் பெண்கள். அதாவது 51.1%. தமிழகத்தைப் பொறுத்தவரை, வாக்காளர்கள் எண்ணிக்கையிலும் சரி, சமீபத்திய சட்டமன்றத் தேர்தல்களில் வாக்களித்தோரிலும் சரி, பெண்களே அதிகமானோர். கட்சிப் பாகுபாடுகளைக் கடந்து, ஒரு ஜனநாயக நாட்டில் பெண்களின் குரல் அதிகார மையத்தில் ஒலிக்க வேண்டும்.
பெண்கள் அரசியலுக்கு வருவது ஏதோ ஒரு பாலினத்திற்கான சலுகை அல்ல; அது ஒரு சமூகத்தின் முழுமையான வளர்ச்சிக்கான அடிப்படைத் தேவை. மக்கள் தொகையில் பாதியாக இருக்கும் பெண்களுக்கு, சட்டம் இயற்றும் இடங்களில் உரிய இடமில்லை எனில் அது முழுமையான ஜனநாயகமாகாது.
ஏணிப்படியில் பெண்கள்: உள்ளாட்சி முதல் சட்டசபை வரை!
கல்வி, சுகாதாரம், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் வறுமை ஒழிப்பு போன்ற விவகாரங்களில் பெண்களின் அணுகுமுறை மிகவும் யதார்த்தமானதாகவும், தீர்வு நோக்கியும் இருக்கும். உள்ளாட்சி அமைப்புகளில் ஏற்கனவே பெண்கள் தங்கள் ஆளுமையை நிரூபித்துள்ளனர். சட்டம் காரணமாக உள்ளாட்சியில் 33% பெண்கள் பொறுப்புக்கு வருகிறார்கள். குடும்ப நிர்வாகத்தையும் பொது நிர்வாகத்தையும் திறம்படச் சமன் செய்யும் ஆற்றல் அவர்களுக்கு உண்டு என்பதை அங்கே நிரூபித்துள்ளனர். ஆனால், சட்ட – நாடாளுமன்றங்களில் இவர்களின் எண்ணிக்கை இன்னும் குறைவாகவே உள்ளது.
முட்டுக்கட்டை போடும் முரண்பாடுகள்: தடைகளைத் தகர்ப்போம்!
அரசியல் களத்தில் ஒரு பெண் கால் பதிப்பது அத்தனை எளிதானதாக இருப்பதில்லை. பல அடுக்குத் தடைகள் அவர்களைத் தடுத்து நிறுத்துகின்றன. “அரசியல் என்பது ஆண்களுக்கானது” என்ற பொதுப்புத்தி இன்னும் சமூகத்தில் வேரூன்றி இருக்கிறது. தேர்தல் செலவுகள் மற்றும் நிதி மேலாண்மையில் பெண்களுக்குப் போதிய சுதந்திரமும் வாய்ப்பும் கிடைப்பதில்லை.
அரசியலுக்கு வரும் பெண்கள் மீதான அவதூறுகளும், இணையவழித் தாக்குதல்களும் அவர்களைப் பின்வாங்கச் செய்கின்றன. பல நேரங்களில், இட ஒதுக்கீடு உள்ள இடங்களில் கூட ஒரு ஆணின் நிழலாகவே பெண்கள் நிறுத்தப்படுகின்றனர். இந்தத் தடைகளை உடைத்து எறிந்து பெண்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும்.
உலக நாடுகளின் விஸ்வரூபப் பார்வை!
சில நாடுகள் இந்த விஷயத்தில் நம்மை வியக்க வைக்கின்றன. நிகரகுவா நாட்டின் நாடாளுமன்றத்தில் 53.9% பேர் பெண்கள்! அதே போல மெக்சிகோ, அண்டோரா, ஐக்கிய அரபு அமீரகம் எனப் பல நாடுகளில் 50% பிரதிநிதித்துவம் உள்ளது. இவற்றுக்கெல்லாம் மணி மகுடம் போல, ருவாண்டா நாட்டில் 63.8% பெண்கள் தேர்வாகி உள்ளனர்.
உலக அளவில் நாடாளுமன்றப் பெண்களின் சராசரி சதவீதம் 27.5% மட்டுமே. இந்தியாவிலோ இது சுமார் 14% (மக்களவை) தான்! இந்த நிலையைப் போக்கத்தான் சமீபத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க பாஜக மசோதா கொண்டு வந்தது. ஆனால் காங்கிரஸ் – திமுக கூட்டணி ஏதேதோ காரணம் கூறி தோற்கடித்தனர். நமது அதிமுக பொதுச்செயலாளர் மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்கள், தொலைநோக்குப் பார்வையுடன் இந்த மசோதாவை ஆதரித்தார் என்பதை நன்றியுடன் குறிப்பிட வேண்டும்.
சமூக நீதிச் சுடர்: வாக்கு வங்கி அல்ல… தீர்மானிக்கும் சக்தி!
கட்சி மனமாச்சரியங்களைக் கடந்து அனைவரும், பெண்களுக்கான சட்ட – நாடாளுமன்ற இட ஒதுக்கீட்டை ஆதரிக்க வேண்டும். மக்கள் தொகையில் 50% இருக்கும் பெண்களுக்கு, இந்த மன்றங்களிலும் 50% இடங்கள் இருக்க வேண்டும். பெண்கள் பொறுப்புக்கு வருவது ஒரு குடும்பத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டிற்கும் நல்லது.
தமிழகம் போன்ற முன்னோடி மாநிலங்கள், பெண்களின் அரசியல் பங்கேற்பை வெறும் வாக்கு வங்கியோடு நிறுத்திக் கொள்ளாமல், அவர்களைத் தீர்மானிக்கும் சக்திகளாக மாற்ற வேண்டும். 23 என்ற எண்ணிக்கை 50-ஐ நோக்கி நகர வேண்டும். அதுவே உண்மையான சமூக நீதிக்கான வெற்றியாக அமையும்.