இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் கடந்த 8ஆம் தேதி தனது 96 வயதில் உயிரிழந்தார். இதையடுத்து, அவரின் உடல் விமானம் மூலம் லண்டன் கொண்டு செல்லப்பட்டு பக்கிங்ஹாம் அரண்மனையில் ராணுவ மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், அங்கு இருந்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்துக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அரச குடும்ப உறுப்பினர்கள் அஞ்சலிக்கு பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு ராணியின் உடலுக்கு பல பல்லாயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் நின்று இறுதி மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து, ராணி எலிசபெத் உடல் வெஸ்ட்மின்ஸ்டரிலிருந்து வெஸ்ட்மின்ஸ்டா் அபே-க்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிச்சடங்கு செய்யப்படுகிறது. இந்த இறுதி ஊர்வலத்தில், ராணியின் உடலை அரச குடும்பத்தினர் பின்தொடர்ந்து வருகிறார்கள். பின்னா், வின்ட்சருக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அவரின் கணவா் இளவரசா் பிலிப் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தின் அருகே அடக்கம் செய்யப்படும். இதில் உலக தலைவர்கள் 500க்கும் மேற்பட்டோருடன் சுமார் 10 லட்சத்துக்கும் மேலான மக்கள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் ராணியின் இறுதி சடங்கில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்றுள்ளார்.