சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அஇஅதிமுகவின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் கடந்த 11ஆம் தேதி சில விரும்பத்தகாத அசம்பாவிதங்கள் நடந்தன. இதன் பிறகு வருவாய்த்துறை அதிகாரிகளால் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. இத்துடன், அதிமுக அலுவலகம் மீது ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பில் யாருக்கு உரிமை உள்ளது என்பது குறித்து வரும் ஜூலை 25ஆம் தேதி விளக்கமளிக்கும்படி இரு தரப்பினருக்கும் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சீலை அகற்றுவது தொடர்பாக ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் சார்பில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சீலை அகற்றுவது தொடர்பாக 12ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்பு, அதிமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்கவும் அதிமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். கடந்த 13ஆம் தேதி முதல் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பு வாதங்களுடன் தமிழக காவல்துறை மற்றும் தமிழக அரசு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி சதீஷ்குமார், இன்று தீர்ப்பு வழங்கினார். அதில், “அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரியும், எடப்பாடி பழனிசாமி மனுவை ஏற்று சாவியை அவரிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளார். மேலும், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கவும், ஒரு மாத காலத்துக்கு தொண்டர்களை தலைமை அலுவலகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது” என்றும் நீதிபதி கூறியுள்ளார்.