நாமக்கல் மாவட்டம் அடுத்த பழனியப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன். இவர், சேலம் மண்டல போக்குவரத்து கழகத்தில், பயணச்சீட்டு பரிசோதகராக பணியாற்றியவர். இந்த நிலையில் இவர் கடந்த 2010ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். முனியப்பனுக்கு இளையராஜா, இளையராணி என்ற மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்த நிலையில், தந்தை உயிரிழந்ததை அடுத்து வாரிசு அடிப்படையில் முனியப்பனின் பணியை தனக்கு வழங்கும்படி இளையராணி பதிவு செய்திருந்தார். இதனால், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இளையராணிக்கு அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த ஒரு மாதமாக போக்குவரத்து கழகத்தில் நடத்துனர் பயிற்சிப்பெற்று வந்த இளையராணி தற்போது ராசிபுரத்திலிருந்து சேலம் செல்லும் வழித்தடத்தில் நகர பேருந்தின் நடத்துனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நாமக்கல் மாவட்டத்தின் முதல் பெண் நடத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது.