இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா நோய் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையை மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அந்த விவரங்களின் படி, 9 ஆயிரத்து 923 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த வாரத்தில் மளமளவென புதிதாக உயர்ந்த கொரோனா நோய் தொற்றால் பாதிப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 12 ஆயிரத்து 781 பேருக்கும், ஞாயிறுக்கிழமை 12 ஆயிரத்தி 899 பேருக்கும், கடந்த சனிக்கிழமை 13 ஆயிரத்து 216 பேருக்கும் என மெல்ல மீண்டும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கி உள்ளது. இந்த நிலையில், இதுவரை இந்தியா முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை, 4 கோடியே 33 லட்சத்து 19 ஆயிரத்து 396ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரம் வரை இந்தியா முழுவதும் 79 ஆயிரத்து 313 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். முன்னதாக நேற்று 76 ஆயிரத்து 700 பேர் கொரோனாவுக்கு சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், இன்று சிசிக்கை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புதிதாக நோய் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை குறைந்தாலும், சிசிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 7 ஆயிரத்து 293 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனைத்தொடர்ந்து, இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 4 கோடியே 27 லட்சத்து 15 ஆயிரத்து 193ஆக அதிகரித்துள்ளது. மேலும், நேற்று மட்டும் 17 பேர் இந்தியா முழுவதும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 890ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 196 கோடியே 32 லட்சத்து 43 ஆயிரத்து 3 பேருக்கும் கடந்த 24 மணி நேரத்தில் 13 லட்சத்து 24 பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54.47 கோடியைக் கடந்துள்ளது. இதுவரை 52 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனா தொற்றினால் இதுவரை 63.41 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.