day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

” தாய்ப்பால் எத்தனை நோய்களில் இருந்து பச்சிளம் குழந்தைகளை பாதுகாக்கிறது தெரியுமா ?

” தாய்ப்பால் எத்தனை நோய்களில் இருந்து பச்சிளம் குழந்தைகளை பாதுகாக்கிறது தெரியுமா ?

தாய்ப்பாலுக்கு இணையான உயிர் அமுது வேறில்லை. பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் பசியாற்றும் உணவு மட்டுமல்ல, உயிர் வளர்க்கும் உயிர்சத்தும்தான். போதுமான தாய்ப்பாலும் ஊட்டச்சத்தும் கிடைக்காமல் மறைகிற குழந்தைகளின் உயிரைக்காக்கும் பொருட்டு உலகம் முழுவதும் தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படுகிறது. தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிப்பதற்கான உலக அமைப்பும் உலக சுகாதார நிறுவனமும் யுனிசெஃப்பும் இணைந்து உலக தாய்ப்பால் வாரக் கொண்டாட்டத்தை முன்னெடுத்துவருகின்றன.
பச்சிளங் குழந்தையின் ஆரோக்கியத்துக் காகவும் அனைத்துவிதமான ஊட்டச்சத்துகளும் குழந்தைக்குக் கிடைப்பதற்காகவும் குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களுக்குக் கட்டாயமாகத் தாய்ப்பால் தர வேண்டும் என்பதை இந்த அமைப்புகள் வலியுறுத்துகின்றன. குழந்தையின் சீரான உடல் வளர்சிக்கும் இது உறுதுணை புரியும். 1992ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் முதல் வாரம் உலக தாய்ப்பால் வாரமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.
நோய் தீர்க்கும் அருமருந்து
ஒவ்வோர் ஆண்டும் ஏதாவது ஒரு கருப்பொருளை மையமாக வைத்து தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக, ‘தாய்ப்பால் ஊட்டுதல் – கூட்டுப் பொறுப்பு’ என்பதைக் கருப்பொருளாக அறிவித்துள்ளார்கள்.
குழந்தை பிறந்ததுமே தாய்க்குச் சுரக்கும் மஞ்சள் நிற முதல் பாலை கொலஸ்ட்ரம் என்பார்கள். சீம்பால் என்று சொல்லப்படும் இது குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் தன்மை கொண்டது. சீம்பாலைக் குடித்து வளரும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா, குழந்தைப் பருவத்தில் ஏற்படும் புற்றுநோய், உடல் பருமன், காதில் நோய்த்தொற்று, தோல் அழற்சி, வயிற்றுப்போக்கு, நிமோனியா, இரண்டாம் வகை நீரிழிவு போன்றவை ஏற்படும் அபாயம் பெருமளவில் குறையும்.
தாய்ப்பால் ஊட்டுகிற தாய்மார்களுக்கும் இதனால் நன்மை உண்டு. அவர்களுக்கு மார்பகப் புற்றுநோய், சினைப்பை புற்றுநோய், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படுவதற்கான சாத்தியம் குறைவு. குழந்தை பிறந்த பிறகு சிலருக்கு உடல் எடை அதிகரிக்கும். தாய்ப்பால் தருகிறவர்களுடன் ஒப்பிடும்போது தாய்ப்பால் தராதவர்களின் உடல் எடை அதிகரிக்கும் சதவீதம் அதிகம்.
தாய்ப்பாலில் போதுமான கொழுப்பு, புரதம், சர்க்கரை, விட்டமின் சத்துக்கள் நிறைந்திருப்பதால் குழந்தைக்கு ஆறு மாத வளர்ச்சிக்குத் தேவையான எல்லாமே இதன்மூலம் கிடைத்துவிடும். தாய்ப்பால் மட்டுமே குடிக்கும் குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்களுக்கு வேறெந்த இணை உணவும் தேவைப்படாது.
தாய்ப்பால் ஊட்டுவதால் தாய்க்கும் சிசுவுக்குமான பிணைப்பு வலுப்படும். குழந்தைக்குப் பாதுகாப்பு உணர்வையும் அமைதியையும் இது ஏற்படுத்தும். உலகம் முழுவதும் எளிதில் கிடைக்கக்கூடிய உடனடி உணவு இந்தத் தாய்ப்பால். சுத்தமான சீரான வெப்பநிலையில் இருப்பதும் இதன் மற்றொரு சிறப்பு. தாய்ப்பாலூட்ட பாட்டிலோ வேறு உபகரணங்களோ தேவைப்படாது. அதனால், இது பணத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் உகந்தது.
பாலூட்டும் முறை
பாலூட்டுவதற்கு முன்பு மார்பை மிருதுவான சோப்பால் கழுவிச் சுத்தமாகத் துடைக்க வேண்டும். மார்பை உலர்வாக வைத்துக்கொள்வதன் மூலம் அரிப்பு, நோய்த்தொற்று போன்றவற்றைத் தவிர்க்கலாம். குழந்தையைச் சரியான விதத்தில் பிடிக்கும்போதுதான் அதனால் வசதியாகப் பால் குடிக்க முடியும். குழந்தையை நேராக வைத்துக்கொண்டோ மார்புடன் அணைத்தபடியோ பாலூட்ட வேண்டும். குழந்தையின் தலைக்கு அடியில் கை வைத்துத் தோளுடன் சேர்த்துப் பிடித்து, குழந்தையின் இடுப்புப் பகுதி தாயின் மடியில் படும்படிவைத்துப் பாலூட்ட வேண்டும். பாலூட்டும் பொசிஷன் சரியாக இருந்தால்தான் குழந்தையால் ஒழுங்காகப் பாலைக் குடிக்க முடியும். குழந்தையை மார்பில் அழுத்தக் கூடாது. இப்படிச் செய்வதால் மூச்சுத் திணறக்கூடும்.
எப்போது பாலூட்ட வேண்டும்?
குழந்தை மார்பைத் தேடும் விதத்தில் உதட்டைக் குவித்தாலோ பால் குடிப்பதைப் போலச் சத்தமிட்டாலோ குழந்தைக்குப் பசிக்கிறது என்று பொருள். முதல் மூன்று நாட்களுக்கு 40 முதல் 50 மி.லி. அளவுக்கு சீம்பால் சுரக்கும். குழந்தைக்கு அதுவே போதுமானதாக இருக்கும். மூன்று முதல் நான்கு நாட்களில் குழந்தையின் வயிறு விரிவடையும். தாய்க்கும் மார்பில் பால் சுரந்து கனக்கும்.
குழந்தை பிறந்த முதல் வாரத்தில் தினமும் எட்டு முதல் 12 முறை குழந்தைக்குப் பாலூட்ட வேண்டும். அதாவது இரண்டு அல்லது மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறையோ அல்லது குழ்ந்தை அழும்போதோ பாலூட்டலாம். அடுத்த மாதத்தில் குழந்தை வேகமாகவும் அதிகமாகவும் பால் குடிக்கும் என்பதால் நிறைய முறை பாலூட்டத் தேவை இருக்காது.
ஏன் பாலூட்ட வேண்டும்?
குழந்தை பிறந்ததுமே பாலூட்ட வேண்டும். கருவுற்றது முதல் முதல் 1000 ஆயிரம் நாட்கள் குழந்தையின் வாழ்க்கையில் முக்கியமானவை. அதாவது 270 நாட்கள் தாயின் கருவறையில் இருந்துவிட்டு வெளியே வரும் குழந்தைகளுக்கு முதல் இரண்டு ஆண்டுகள் முக்கியமானவை. இந்தக் காலம் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு முக்கியமானது. அப்போது சத்துக் குறைபாடு ஏற்பட்டால் குழந்தையின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படும்.
என்ன சாப்பிட வேண்டும்?
போதுமான சமச்சீர் உணவைச் சாப்பிட வேண்டும். அதிகமான தண்ணீரையும் திரவ உணவையும் எடுத்துக்கொள்ள வேண்டும். இது நீரிழப்பைத் தடுக்கும். தாயின் உணவு குழந்தையின் வயிற்றுக்கு எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது. அதனால், தாய்மார்கள், சத்தான உணவைப் போதுமான இடைவேளையில் சாப்பிட வேண்டும்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!