தமிழகத்தில் நேற்று (ஜூன் 19) இரவு பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அதிகபட்சமாக தாம்பரம் – 13 செமீ, தரமணி/கொரட்டூர் – 11 செமீ, கட்டப்பாக்கம் – 9.5 செமீ, சென்னை விமானநிலையம் – 9 செமீ, சென்னை நுங்கம்பாக்கம் – 8 செமீ, மழைப்பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்ல இருந்த 31 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில், இரவு பெய்த கனமழை மற்றும் ஆந்திர மாநில கிருஷ்ணா நதிநீர் வரத்து காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்தேக்கங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது. 3,645 மில்லியன் கனஅடி நீரை செம்பரம்பாக்கம் ஏரியில் தேக்கி வைக்க முடியும். ஏரியின் கொள்ளளவு 24 அடியாக உள்ள நிலையில், 23.36 அடியை எட்டி உள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றப்பட வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.