தமிழக அரசின் கீழ் இயங்கும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் பொதுப் பிரிவு – 31 சதவிகிதம், எஸ்டி – 1 சதவிகிதம், எஸ்சி – 18 சதவிகிதம், SCA இருப்பின் அவர்களுக்கு 3 சதவிகிதம் உள் இட ஒதுக்கீடு, எம்பிசி – 20 சதவிகிதம், பிசிஎம் – 3.5 சதவிகிதம், பிசி – 26.5 சதவிகிதம் என்ற அடிப்படையில் இட ஒதுக்கீடு கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது, முதலில் பொதுப் பிரிவினருக்கான 31% இட ஒதுக்கீட்டுக்கு பட்டியல் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே தயாரிக்கப்பட வேண்டும். இதில் அனைத்துப் பிரிவினருக்கும் ஏற்ற வகையில், பாகுபாடின்றி பட்டியல் தயாரிக்க வேண்டும். மேல்நிலைப் பள்ளிகளில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறதா என்பதை கண்காணித்து, உறுதிப்படுத்தவும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.