அஇஅதிமுகவில் நடைபெற்ற ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக அஇஅதிமுக சார்பில் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட அனுமதிக்கக் கூடாது என ஓ.பன்னீா்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை கடந்த ஜூலை 11ஆம் தேதி விசாரித்த நீதிபதி கட்சி விதிகளுக்கு உள்பட்டு பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தலாம். பொதுக்குழுவில் செயல்முறையில் விதிகள் மீறப்பட்டால் மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம்’ என்று உத்தரவு பிறப்பித்திருந்தார். இதையடுத்து, தனி நீதிபதி அமா்வு உத்தரவை எதிா்த்து, ஓ.பன்னீா்செல்வம் சார்பில் கடந்த ஜூலை 15ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஒருங்கிணைப்பாளா் கையொப்பம் இல்லாமல் உரிய அழைப்புக் கடிதம் இல்லாமல் இந்தப் பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது. எனவே, சென்னை உயா்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும். ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன்பு இன்று (ஜூலை 29ஆம் தேதி) விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில், ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதா என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு வாய்ப்பில்லை என இரு தரப்பினரும் பதில் அளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, அதிமுக பொதுக்குழு தொடர்பாக மொத்தமாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இத்துடன், கடந்த 11ஆம் தேதி பொதுக்குழுவில் என்ன நடந்தது என்றும் கேள்வி எழுப்பினர். அதற்கு, ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்குவது உள்ளிட்ட பல தீவிரமான முடிவுகள் பொதுக்குழுவில் எடுக்கப்பட்டதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, ”அதிமுக பொதுக்குழு வழக்கை சென்னை உயர் நீதிமன்றமே விசாரிக்கும். எனவே ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தை நாட அறிவுறுத்துவதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது. மேலும், 3 வார காலத்துக்குள் ஓ.பன்னீர்செல்வத்தின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து அறிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக தலைமை அலுவலகம் சார்பில் ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதில், தங்கள் தரப்பு வாதங்களைக் கேட்ட பின்னரே ஓ.பன்னீர்செல்வம் அளித்த மனுவில் எந்தவொரு உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.