இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி ஐந்து டி20 போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி, இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான மூன்று டி20 போட்டிகள் முடிந்த நிலையில், நான்காவது, டி20 போட்டி நேற்று இரவு 7 மணிக்கு குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இந்தத் தொடரில், தொடர்ச்சியாக 4ஆவது முறையாக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில், 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 16.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 87 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது. இதனால், இந்திய அணி 82 ரன்கள் எடுத்து அதிரடியாக வெற்றிப்பெற்றது. ஏற்கனவே விளையாடிய மூன்றாவது போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. தென்னாப்பிரிக்க அணி முதல், இரண்டு போட்டிகளில் வென்றுள்ளது. இந்த நிலையில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள தென்னாப்பிரிக்க அணியை இந்திய அணி இந்த ஆட்டத்தில் அபாரமான விளையாட்டை வெளிப்படுத்தி வீழ்த்தியதன் மூலம் தொடரை சமன் செய்து ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றியுள்ளனர். இதனையடுத்து, இந்த தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி, நாளை இரவு 7 மணிக்கு பெங்களூருவில் நடைபெறவுள்ளது. இதில், வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றலாம் என்பதால் இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.