அரசுத் துறைகளில் உயர் பதவிகளில் நியமனம் பெற்றுத் தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக ஜெகன்நாதன், இந்துமதி உள்ளிட்டோருக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்ததுடன், அவர்களின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன. இந்த நிலையில், கிளாஸ் 1 பதவிகளுக்கு ரூ.78 லட்சத்தை சடகோபன் என்பவர் கொடுத்ததாகவும் அதில் இருந்து தற்போதைக்கு ரூ.10 லட்சத்தை வழங்கக்கோரியும், பூந்தமல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால், விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக கூறி, பணத்தை வழங்க பூந்தமல்லி நீதிமன்றம் மறுத்து உத்தரவிட்டது. இதையடுத்து, உத்தரவை எதிர்த்தும், விசாரணையை துரிதப்படுத்த உத்தரவிடக்கோரியும் சடகோபன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, அரசு பதவி பெறும் பேராசையில் ரூ.78 லட்சத்தை லஞ்சமாக கொடுத்த மனுதாரர், பணத்தை திரும்பப் பெறுவதற்கு, வழக்கு விசாரணை முடியும் வரை காத்திருக்க வேண்டும் எனக் கூறி, சடகோபனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், அரசுப் பணி நியமனம் என்பது தேர்வு நடவடிக்கைகள் மூலம்தான் பெற வேண்டுமே தவிர லஞ்சம் கொடுத்து எந்த பணியும் பெற முடியாது என்பதை அனைவரும் உணர வேண்டும் எனக் கூறிய நீதிபதி, இதுபோன்று லஞ்சம் கொடுக்கப்படுவதால், தேர்வு நடவடிக்கைகளில் அதிக மதிப்பெண்கள் பெறுபவர் நிலை என்னவாகும் என்ற குற்ற உணர்வு இல்லாமல், அனைத்தும் தெரிந்தே மனுதாரர் ரூ.78 லட்சத்தை லஞ்சமாக கொடுத்துள்ளதால் அவரது மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என கூறியுள்ளார்.