சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அஇஅதிமுகவின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி சில விரும்பத்தகாத அசம்பாவிதங்கள் நடந்தன. இதன் பிறகு வருவாய்த்துறை அதிகாரிகளால் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த சீலை அகற்றுவது தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில் இரு தரப்பு வாதங்களுடன் தமிழக காவல்துறை மற்றும் தமிழக அரசு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி சதீஷ்குமார், “அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரியும், எடப்பாடி பழனிசாமி மனுவை ஏற்று சாவியை அவரிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளார். மேலும், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கவும், ஒரு மாத காலத்துக்கு தொண்டர்களை தலைமை அலுவலகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது” என்றும் நீதிபதி கூறியிருந்தார். அதன்படி, மயிலாப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் போடப்பட்டிருந்த சீலை அகற்றி, சாவியை ஈபிஎஸ் தரப்பில் அங்கீகரிக்கப்பட்ட முகவரான பி.மகாலிங்கத்திடம் ஒப்படைத்தார். இதையடுத்து, 10 நாட்களாக சீல் வைக்கப்பட்டு இருந்த கட்சி அலுவலகம் பின்னர் திறக்கப்பட்டு நீதிபதி கூறியபடி பலத்த காவலர்கள் பாதுபாப்பை தமிழ்நாடு காவல்துறை வழங்கியது. இந்தநிலையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராகவும் வட்டாட்சியர் அதிமுக அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிச்சாமி வசம் ஒப்படைத்ததற்கும் எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதையடுத்து, ஓ.பி.எஸ்., தொடர்ந்த வழக்கில் தங்களைக் கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.