இங்கிலாந்து நாட்டின் பர்மிங்ஹாம் நகரில் 22ஆவது காமன்வெல்த் போட்டிகள் ஜூலை மாதம் 28ஆம் தேதி தொடங்கி வரும் ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இந்தப்போட்டியில் 72 நாடுகளைச் சேர்ந்த 5 ஆயிரத்து 054 வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்த போட்டியில் இந்தியா சார்பில், 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். இதன் தொடக்கவிழா நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்றது. இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் தொடக்க விழாவில் பங்கேற்று போட்டிகளை தொடங்கி வைத்தார். தொடக்கவிழா அணி வகுப்பில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து இந்திய தேசிய கொடியை ஏந்திச் செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். இந்த காமன்வெல்த் போட்டியில் முதல் முறையாக மகளிர் கிரிக்கெட் போட்டியும் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் இன்று நடைபெறும் பெண்கள் 20 ஓவர் டி20 கிரிக்கெட் போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி முதலாவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியுடன் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்திய மகளிர் அணி முதலில் விளையாடி வருகிறது.