சென்னை: மக்களாட்சியை ஆதாரமாக கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு சாசனம், 26.1.1950 அன்று அமலுக்கு வந்த அந்தினம், குடியரசு தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில், சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள காந்தி சிலை அருகே ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசின் சார்பில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். ஆனால் அந்த பகுதியில் மெட்ரோ ரெயில் பணிகள் நடக்கின்றன.
இந்நிலையில், மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே இந்தாண்டின் குடியரசு தினவிழா நடைபெறுகிறது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக சில நிகழ்ச்சிகள் மட்டுமே நடத்தப்பட்டு 22 நிமிடங்களில் விழா நிறைவடைந்தது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. பொதுமக்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த ஆண்டு குடியரசு தினத்தை வெகுவிமரிசையாக முழு அளவில் கொண்டாட முடிவு செய்யப்பட்டு உள்ளது. காலை 7.52 மணிக்கு விழாப்பகுதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவார்.
காலை 7.54 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, மனைவி லட்சுமி ரவியுடன் வருகிறார். அதைத்தொடர்ந்து அணி வணக்கம் ஏற்கும் மேடைக்கு அருகே வரும் கவர்னர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பார். அதைத்தொடர்ந்து காலை 8 மணிக்கு தேசிய கொடியை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றி வைக்கிறார். அப்போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் பறந்து வந்து மலர் தூவ ,தேசிய கீதம் இசைக்கப்படும். அணி வகுப்பு மேடைக்கு வந்து வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம், சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது, காந்தியடிகள் காவலர் பதக்கங்கள், சிறந்த போலீஸ் நிலையத்திற்கான கோப்பைகள் ஆகியவற்றை உரியவர்களுக்கான பதக்கங்களை முதலமைச்சர் மு.கா.ஸ்டாலின் வழங்குவார். அதைத்தொடர்ந்து கண்கவர் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறும்.