day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

வானம் காணாத வெண்ணிலா

வானம் காணாத வெண்ணிலா

“உனக்கென்ன சரோஜா மூன்டும் பொடியள்.. ஒரு கரச்சலும் இல்ல.. இஞ்ச பார் நான் ஒரு பெட்டய பெத்துப்போட்டு. இவளுக்கு சீதனம் குடுத்துக் கலியாணத்தக் கட்டி வைக்கிறதுக்குள்ள சீவன் போகுது..” என்று பக்கத்து வீட்டு சௌந்தலா அடிக்கடி அலுத்துக்கொள்ளும் போதெல்லாம் ஏனோ சரோஜாவுக்குக் கண்களைக் கரித்துக்கொண்டு கண்ணீர்தான் வரும்.
வயது ஐம்பதைத் தாண்டிவிட்டது. ஆனாலும், வாழ்ந்த வாழ்க்கையில் ஏதோ ஒரு குறை மனதை நெருடிக்கொண்டே இருக்கிறது. என்ன பெரிய ஆண்பிள்ளைகளைப் பெற்று பெருமை கண்டுவிட்டாள் அவள். கொஞ்சம் ஏலாது என்று சாய்ந்தாலும் ஒரு வாய் தண்ணி தரக்கூட ஒருவரும் இல்லை. அப்படியான நேரங்களில் எல்லாம் ஒரு பெண் பிள்ளையைப் பெற்றிருக்கலாமே என்று கணவனிடம் புலம்புவாள்.
அவளின் கணவனோ “விசரே உமக்கு.. பழைய கதையெல்லாம் கதைச்சுக்கொண்டு.. பேசாம இரும்.. படுக்கப் போக முதல் தண்ணிய எடுத்தந்து வச்சிட்டுப் படும் எண்டு சொல்லி அலுத்துப் போய்ட்டு.. இதுக்குப் பொம்பிள பிள்ள வேணும் என்டு விசர் கத கதாயாதேயும்..” என்பான்.
சரோஜாவும் சிவனேசனும் காதலித்துத் திருமணம் முடித்துக் கொண்டபோதும் அது பெற்றோரின் விருப்பத்தின் பேரிலேயே நடந்த திருமணம் என்பதால் வாழ்க்கை அவர்களுக்கு அவ்வளவு கஷ்டமாக இருக்கவில்லை. “நீ எப்பிடியோ செட்டில் ஆகிட்ட.. உன்ர அவர் லோயர்.. நீ ரீச்சர்.. பேந்தென்னடி குறை உனக்கு..” என்று அவளது தோழிகளும் கொஞ்சம் பொறாமைப்பட்டதுண்டு.
சரோஜாவுக்குத் திருமணம் ஆன புதிதில் கணவனோடு கோவில் கடைத்தெரு என்று வெளியில் போகும் போதெல்லாம் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு வரும் தம்பதியினரைப் பார்க்கையில் தானும் சீக்கிரமாகக் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தோன்றும். அதிலும் கோவிலில் பட்டுப்பாவாடை போட்டுக்கொண்டு சின்ன கால்களில் கொலுசுச் சத்தம் சல்..சல்.. என்று கேட்க, தாயின் கையைப் பிடித்துக்கொண்டு மற்ற கையால் பாவாடையைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு நடந்து வரும் பெண் குழந்தைகளைப் பார்க்கும் போது சரோஜாவுக்கு ஆசை அணை மீறும், தான் பெண் குழந்தை ஒன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று.
கோவிலுக்கு வந்தால் பெண் குழந்தை வேண்டும் என்று நேர்ந்துவிட்டுத் தான் போவாள். அவள் ஆசைப்படியே முதலில் கருவில் உருவானது பெண் குழந்தைதான். ஸ்கானிங் செய்து பார்த்தபோது பெண் குழந்தை என்று வைத்தியர் சொன்னார். அவளுக்குச் சொல்ல முடியாத மகிழ்ச்சி. ஆனால், வீட்டில் அவள் எதிர்பார்த்த அளவு மகிழ்ச்சி இருக்கவில்லை.
“எடி பிள்ள.. எனக்கும் மூத்தவன் பெடியன்.. உனக்கும் மூத்தவன் பெடியன்தானே.. இவளுக்கு மட்டும் என்ன இப்பிடி.. புருசன்ட உழைப்பெல்லாம் சீதனத்துக்குத்தான் சேத்து வக்கோணும்..” என்று சரோஜாவின் அம்மம்மா தன் மகளிடம் புலம்பிக் கொண்டிருந்தபோது அவளுக்கு அது பெரும் கவலையாகத்தான் இருந்தது.
“சும்மா இரன அம்மா.. அவள் என்ன செய்வாள்.. கடவுள் குடுத்தது எல்லாம் பிள்ள தான்.. பின்னுக்கு அவளுக்கு வயசு போன காலத்தில ஆரும் வேண்டாமோ அவள பாக்க..” என்று தன் தாயைச் சமாதானப்படுத்துவதே சரோஜாவின் தாயின் வேலையாக இருந்தது. சரோஜா நாளுக்கு நாள் தன் வயிற்றில் வளரும் மகள்மீது அதிக ஆசையும் எதிர்பார்ப்பும் வைக்கத் தொடங்கினாள். நல்லூர் கோவில் திருவிழாவுக்குப் போக வெளிக்கிட்ட போது “சரோ.. இண்டைக்கு திருவிழா கடசி நாளடி பிள்ள.. நல்ல நீத்துப்பெட்டி பின்னி வைச்சிருப்பாங்கள் கடையல்வழிய.. ரெண்டு நீத்துப்பெட்டி வாங்கிக்கொண்டு வா.. மலிவா வச்சிருப்பாங்கள்..” என்று சிவநேசனின் தாய் சொல்லி அனுப்பியபோது சரி என்று தலையாட்டிவிட்டுப் போனவள்.
அங்கு போனதும் பிறக்கப் போகும் தன் மகளுக்கு கலர் கலரா கண்ணாடி வளையல்களும் பூ வைச்ச லேஸ்பாண்டும் இன்னும் பல அலங்காரப் பொருட்களையும் வாங்கிக்கொண்டு சனக் கூட்டத்தில் இருந்து வெளியே வந்தவளுக்கு அப்போதுதான் ஞாபகம் வந்தது மாமியார் நீத்துப்பெட்டி வாங்கச் சொன்னது. பையைத் திறந்து துளாவினாள் ஒரு சதமும் இல்லை. கணவனிடம் “இஞ்ச அப்பா ஒரு நூறுவா இருந்தா தாங்கோவன்.. நீத்துப்பெட்டி வாங்க மறந்திட்டன்..” என்று கேட்க, “மாத்தின காசு இல்ல சரோ.. நீத்துப்பெட்டி வாங்கத் திரும்பவும் இந்த சனத்துக்குள்ள போகப் போறியோ.. பிறகு கடைல வாங்கலாம்..” என்று சொல்லி அவளை வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டான் சிவநேசன்.
நீத்துப்பெட்டி இல்லாமல் வீட்டிற்கு வந்து மாமியாரிடம் அன்று இரவு முழுவதும் வாங்கிக்கட்டிக் கொண்டாள். இப்படியிருக்கையில் ஏழாவது மாதம் தொடங்கியிருந்தது சரோஜாவுக்கு. ஒரு நாள் கிணத்தடியில் உடுப்பு அலசிவிட்டு ஊற்றிய சவர்க்கார தண்ணியில் வழுக்கி விழுந்தவளுக்கு வயிற்றுப் பகுதியில் பெரிய அடி. அதிக ரத்தப்போக்கு. அவளுக்கு ஏதுவும் அடியில்லை ஆனால், அவள் கனவு ஆசை எல்லாவற்றையும் வாரிச்சுருட்டிக்கொண்டு வயிற்றில் இருந்த குழந்தை அழிந்துவிட்டது. அவளால் அந்த இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ரொம்பவும் மனமொடிந்து போனாள்.
வீட்டிலுள்ளவர்களின் அன்பும் மருந்தும் சேர்ந்து அவள் உடலும் மனமும் குணமடைந்தாள். அதன் பின் ஒரு வருடத்திலேயே மீண்டும் கருவுண்டாகி முதல் குழந்தை பிறந்து விட்டது. பிறகு ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொரு வருட இடைவெளியில் மூன்றும் ஆண் பிள்ளைகளைப் பெற்றாள். ஆனாலும், ஒவ்வொரு முறை கருவுறும்போதும் அது பெண் குழந்தையாக இருக்கக் கூடாதா என்ற ஏக்கம் அவளை வாட்டியது. ஆனால், மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே. அதற்குப் பிறகு பிள்ளைகள், அவர்களின் படிப்பு, அவர்களின் திருமணம் என்று வாழ்க்கையில் பொறுப்புகள் கூடி வாழ்க்கை ஒரு இயந்திரம் போல் இயங்கத் தொடங்கிவிட்டது.
ஆனாலும், அக்கம் பக்கத்தில் சாமத்திய வீட்டுக்கு யாரும் அழைத்து அங்கு போனால் திரும்பி வரும்போது மனம் முழுவதும் ஒரு பாரத்தைச் சுமந்துகொண்டுதான் வருவாள். தன் வயதொத்த பெண்கள் தமது பெண் பிள்ளைக்குச் சேலைகட்டி, பூச்சூட்டி அழகுபார்த்து சாமத்திய வீடு செய்வதைப் பார்க்கும்போது தன்னைமீறிப் பொங்கி வரும் அழுகையைச் சில நேரங்களில் அவளால் கட்டுப்படுத்த முடிவதில்லை. வீட்டுக்கு வந்ததும் தகரப்பெட்டிக்குள் பத்திரமாகப் பூட்டி வைத்திருக்கும் அழிந்து போன அவளின் கனவை எடுத்து ஏக்கமாகப் பார்ப்பாள். முதல் முதலில் உருவான கரு அதுவும் பெண் குழந்தை. வயிற்றில் உருவான கருவை ஸ்கேன் போட்டோ எடுத்துக் கொடுத்தபோது அதை அடிக்கடி எடுத்துப் பார்த்து சந்தோசப்படுவாள். அந்தப் பிள்ளை இல்லையென்று ஆனவுடன் தன் பிள்ளைக்கு வாங்கிய அலங்காரப் பொருட்களையும் அந்தப் படத்தையும் கவனமாக அந்தத் தகரப்பெட்டிக்குள் போட்டுப் பூட்டி வைத்திருந்தாள்.
சரோஜாவின் மகன்களும் சரி, கணவனும் சரி அவளுக்கு வாழ்வில் எந்தவொரு குறையும் வைக்கவில்லை. மகன்களின் திருமணம்கூட சரோஜாவின் விருப்பப்படிதான் நடந்தது. பல நேரங்களில் தாயின் முகத்தில் காணும் ஏக்கமும் சோகமும் ஏன் என்று அந்தப் பெடியளுக்குப் புரிவது கடினமாக இருந்தது. “அம்மா ஏனம்மா.. ஒரு மாதிரி இருக்கிறியள்.. உடம்புக்கு ஏதும் செய்யிதே.. டொக்டரிட்ட போவமே..” என்று பாசத்தோடும் கவலையோடும் கேட்கும் மகனிடம் என்ன சொல்வாள் அவள். நீங்கள் மூன்று ஆண்பிள்ளைகள் இருந்தும் எனக்கு ஒரு பெண் பிள்ளையின் பாசம் இல்லையென்ற கவலை இருக்கிறது என்று சொல்லி மகன்மாரின் மனதை உடைப்பதா? அப்படிச் சொன்னால் தன்னைக் கண்ணைப்போல் காக்கும் தன் பிள்ளைகளின் பாசத்தைக் குறைவாகக் கூறுவது போல் ஆகிவிடாதா?
“ஒண்டும் இல்லையடா தம்பி… இந்த நாரிக்கொதி பெரிய கரச்சலாக்கிடக்கு.. ஒரு இடத்தில கொஞ்ச நேரம் இருக்க ஏலுதா…” என்று எதையாவது சொல்லி சமாளித்து விடுவாள். மகளைப் போல் இருந்து கவனித்துக் கொள்ளும் மருமகள்கள் அமைந்தபோதும் மருமகள் மகளாக மாட்டாளே. மருமகள் தேனீர் தர ஒரு நிமிடம் பிந்தினாலும்கூட என்ர மகளென்டா இப்படிச் செய்வாளா.. என்ன இருந்தாலும் இவள் மருமகள்தானே என்று நினைப்பது மாமியார் போஸ்டிங்கில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கும் மன பிராந்தி.
சரோஜாவுக்கும் அப்படித்தான். மகள் என்ற ஒரு விடயம் அவளுக்கு நோய்போல் அவள் மனதைப் பலவீனமாக்கி அவளை அழித்துக் கொண்டிருந்தது. அவளின் கவலையை யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. சிவநேசன்கூட மனைவியின் மனதை அறியவில்லை.
அன்று வீட்டில் சரோஜா மட்டுமே இருந்தாள். சிவநேசனின் சினேகிதர் ஒருவனின் மகளின் திருமண வீட்டிற்கு அனைவரும் போயிருந்தனர். அங்கு போனாலும் சிவநேசனின் சினேகிதரின் மனைவி தன் மகளைப் பற்றி ஏதாவது பெருமை பேசக்கூடும், அதைத் தன்னால் தாங்க முடியாது என்ற எண்ணத்தில் “எனக்குக் கால் ரெண்டும் ஒரே நோவாக்கிடக்குதப்பா.. நீங்கள் எல்லாரும் போட்டு வாங்கோவன்..” என்று அவர்களை அனுப்பி வைத்தாள்.
எல்லோரும் போன பின் தகரப்பெட்டியை எடுத்துக்கொண்டு வந்து வெளியில் விறாந்தையில் உட்கார்ந்தாள். அதைத் திறந்து பார்த்தாள். எத்தனையோ வருடங்களுக்கு முன் நல்லூர் கந்தன் ஆலய வளவில் இருந்த கடையில் வாங்கிய கலர் கலரான வளையல்கள் கண்ணைக் கூசின. வளையல்களை எடுத்துக் கையில் வைத்துக் கிலுக்கிப் பார்த்தாள். “நல்லூர் கந்தா.. உனக்குக்கூட என்ர பிள்ளயக் காப்பாத்த அண்டைக்கு மனமில்லாம போய்ட்டு.. என்ன..” என்று நினைத்து விரக்தியோடு புன்னகைத்துவிட்டு அந்தப் படத்தை எடுத்துப் பார்த்தாள். ஏதோ ஒரு வடிவத்தில் கருப்பும் வெள்ளையுமான நிறத்தில் இருந்தது. அவளது வயிற்றை ஸ்கேன் பண்ணி எடுத்த படம். கண்கள் மங்கின சரோஜாவுக்கு. கீழே நிலத்தில் இருந்தவள் பக்கத்தில் இருந்து கதிரையின் கைபிடியில் ஊன்றி எழுந்திருக்க முயன்றாள் முடியவில்லை. அப்படியே பொத்தென்று விழுந்து உட்கார்ந்துவிட்டாள் முடியாமல். “அம்மா எழும்புங்கோவன்..” என்று சின்னக் குரல் அவள் காதுகளில் தேனாய்ப் பாய்ந்தது. அவளால் பேச முடியவில்லை. பார்வை மங்கலாக இருந்தது. முன்னால் யாரோ நிற்பது போல் இருந்தது அவளுக்குத் தன் சாயலில்.
“அம்மா.. நிலத்தில இருக்காதேங்கோ.. வாங்க உள்ள கட்டில்ல வந்து படுங்கோவன்..” என்று சொல்லி அவள் கையை யாரோ பற்றி தூக்கினார்கள். மென்மையான அந்தக் கைகளின் ஸ்பரிஸம் அவளைச் சிலிர்க்க வைத்தது. சரோஜா அந்தக் கைகளின் உதவியுடன் மெல்ல எழுந்து உள்ளே அறைக்குள் போய் கட்டிலில் படுத்தாள். கண்கள் மேலும் மங்கிக்கொண்டு வந்தது. எதிரில் தெரிந்த அவள் சாயலிலான அந்த உருவம் மறைந்து கொண்டே போனது. அவளும் கண்களை மூடினாள்.
நண்பன் வீட்டுத் திருமண நிகழ்வு முடிந்து சிவநேசனும் பிள்ளைகளும் வீட்டுக்கு வந்தபோது சரோஜா உறங்கிக்கொண்டிருந்தாள். நீண்ட நேரமாகியும் சரோஜா எழுந்திருக்கவில்லை. மாமியாரை எழுப்பவென்று போன சரோஜாவின் மூத்த மருமகள் கூச்சலிட்டாள். எல்லோரும் ஓடி வந்து பார்க்க அப்போதுதான் தெரிந்தது, சரோஜா நிரந்தரமாக உறங்கி விட்டிருந்தாள். அவளின் கடைசி மகன் தாயின் கையில் எதையோ பற்றிப் பிடித்தபடி இருப்பதைக் கண்டு அதைக் கையிலிருந்து மெல்ல எடுத்துத் தகப்பனிடம் கொடுத்தான். “என்னப்பா இது.. அம்மா.. இத வச்சிக்கொண்டு படுத்திருக்கிறா… ஆர்டப்பா.. இது..? என்றான் அழுதபடி.
“கடவுளே.. என்ர ராசாத்தி.. இவ்வளவு காலமா இத நினைச்சு ஏங்கிட்டு இருந்தியா நீ.. நானொரு விசரன்.. உன்ர மனசில இருக்கிறத என்னன்டுகூட கேக்காம இருந்திட்டனே..” என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதான் சிவநேசன்.
அந்த ஆடம்பரமான பெரிய வீடு முழுவதும் அழுகை சத்தம் எதிரொலித்தது. சரோஜாவின் கையிலிருந்த படத்தைத் தவிர அவள் மட்டுமே ஆசையாய்ப் பார்த்துப் பாதுகாத்த அந்த தகரப்பெட்டியும் அதிலிருந்த அலங்காரப் பொருட்களும் அங்கு இருக்கவில்லை.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!