அமைச்சர் செந்தில்பாலாஜி பண மோசடி புகார் தொடர்பான வழக்கில் விரிவான விசாரணை மேற்கொள்ள 6 மாதங்கள் அவகாசம் கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசார், சுப்ரீம் கோர்ட்டில் மனு அளித்தனர். இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் விக்ரம் நாத், அஸானுதீன் அமானுல்லா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கு தொடர்பாக இன்னும் எவ்வளவு காலம் அவகாசம் வேண்டும் என்பதை அவர்களே (டிஜிபி மற்றும் உள்துறை செயலாளர்) இந்த விவகாரத்தில் நேரில் வந்து கேட்கட்டும் என்றும், 6 மாத அவகாசம் எல்லாம் வழங்க முடியாது. குறைந்தபட்ச கால அவகாசம் மட்டுமே வழங்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
உரிய காரணங்களை தெரிவித்தால் கூடுதல் அவகாசம் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும், டிஜிபி மற்றும் உள்துறை செயலாளர் ஆஜராகும் உத்தரவை திரும்பப் பெறுவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.