புதிதாக உருமாற்றம் அடைந்திருக்கும் கொரோனா வைரஸால், இன்னும் மக்கள் அச்சத்திலேயே உறைந்துள்ளனர். கொரோனா தொடர்ந்து உருமாறிக்கொண்டே இருப்பதால் அதை முழுமையாக அழிக்கமுடியாத சூழலே நிலவுகிறது. என்றாலும், அதைத் தடுப்பதற்கு தடுப்பூசி ஒன்றுதான் தீர்வாக இருக்கிறது. இந்த நிலையில், உலக நாடுகள் பலவற்றில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் வேகம் பிடித்துள்ளது. குறிப்பாக, சீனாவின் ஷாங்காய் நகரத்தில் உருமாறிய ஒமைக்ரான் அதிவேகமாகப் பரவி வருகிறது. அங்கு, இதுவரை ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அந்நகரத்தில் ஊரடங்கு அமலில் இருப்பதால், வீட்டுக்குள் இருக்கும் நபர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் போடப்பட்டிருக்கின்றன. அதில், முத்தமும் ஒன்று. இன்னும் சொல்லப்போனால், சீனாவில் கடந்த சிலநாள்களுக்கு முன்பு, ஒரேநாளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது, கடந்த இரண்டரை ஆண்டுகளில் சீனாவின் அதிகபட்சமாகும். இது, சீனாவுக்கு பேரதிர்ச்சியைத் தருவதாக உள்ளது. சீனாவில் மட்டுமல்ல, பிரிட்டன், ஜெர்மனி, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா பரவல் வேகம் பிடிக்கிறது. பிரிட்டனில் மட்டும் கடந்த மார்ச் மாத தகவலின்படி 49 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதுவரை இல்லாத அதிகபட்ச பாதிப்பு இது. தவிர, அங்கு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும்கூட கணிசமாக அதிகரித்துவருகிறது. அதுபோல், ஜெர்மனியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் இந்தியாவில் கொரோனா தாக்கம் குறைந்துள்ளது. தலைநகர் டெல்லி மற்றும் ஹரியாணா, குஜராத் ஆகிய மாநிலங்களில் மட்டும் கொரோன பரவல் சற்று அதிகரித்திருக்கிறது. தமிழகத்தில் முற்றிலும் குறைந்துள்ளது. என்றாலும், எச்சரிக்கையாய் இருப்பது நம் கடமை. நம் பிரதமர் நரேந்திர மோடி, ‘கொரோனா வைரஸ் இன்னும் நீங்கவில்லை. மீண்டும் மீண்டும் உருமாறி பரவி வருகிறது. உருமாறிய கொரோனா வைரஸ் எப்போது பரவும் என்பது யாருக்கும் தெரியாது. எனவே, தொற்றுக்கு எதிரான போரை மக்கள் கைவிட்டுவிடக்கூடாது’ என்று தெரிவித்துள்ளார். ஆகையால், மக்களாகிய நாம் எப்போதும்போல் முகக்கவசம், சமூக இடைவெளி, கை சுத்தம் ஆகியவற்றைத் தவறாது கடைப்பிடிக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தாதவர்கள் அதைச் செலுத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான் அரசின் அறிவுரையாக இருக்கிறது. அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டியது மக்களின் கடமை.