இன்னும் உலகைப் பொறுத்தவரை கோவிட் தொற்று குறையாத சூழலே உள்ளது. புதிய வைரஸ்கள் உருமாற்றம் அடைந்து பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. ஆக, கொரோனாவிடமிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வதற்கு, தடுப்பூசியே நம்முன் இருக்கும் ஒரே வழி. இதைத் தடுக்கும் நோக்கில், கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இவ்வூசிகளைத் தொடர்ந்து இந்தியாவில் 3வது கொரோனா தடுப்பூசியாக ஸ்புட்னிக்-வி பயன்பாட்டில் இருக்கிறது. இந்த நிலையில், இந்திய அறிவியல் கழகத்துடன் இணைந்து தடுப்பூசி தயாரிப்பில் தொடக்கநிலை நிறுவனமாக உள்ள மைன்வேக்ஸ், கடந்த ஓராண்டாக வெப்பத்தை தாங்கிக்கொள்ளும் திறனுள்ள கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசியை குளிர்நிலையில்வைத்து பாதுகாக்க வேண்டிய தேவை இருக்காது. சாதாரண அறை வெப்பநிலையில் வைத்தே பயன்படுத்தலாம் எனவும் அது தெரிவித்துள்ளது. ஸ்பைக் புரதத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, விலங்குகளின் பரிசோதனையில் வெற்றிபெற்றுள்ளது என்பதும் விரைவில் இவ்வூசி மனிதர்களிடம் பரிசோதனை செய்யப்பட இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.