மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் கீழ் உள்ள தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் (இ.எஸ்.ஐ.சி.) நாட்டில் ஏராளமான மருத்துவமனைகளை நிறுவியுள்ளது.மேலும் தொழிலாளர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு இந்த மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டு குறிப்பாக தொழிற்சாலைகள், தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் கட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை இரண்டு மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட 10 மருத்துவமனைகளே இ.எஸ்.ஐ.சி. நிறுவனத்தின் சார்பில் திறக்கப்பட்டுள்ளன. இதில் சென்னை கே.கே. நகர் மற்றும் திருநெல்வேலி மருத்துவமனைகள் மட்டும் மத்திய தொழிலாளர் வேலைவாய்ப்புத் துறையின் இ.எஸ்.ஐ.சி. நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது. மீதமுள்ள 7 இ.எஸ்.ஜ.சி. மருத்துவமனைகள் தமிழக தொழிலாளர் நலத்துறையாலும், கோவை இ.எஸ்.ஐ.சி. மருத்துவக் கல்லூரி மாநில அரசின் சுகாதாரத் துறையின் சார்பிலும் நிர்வகிக்கப்படுகிறது.
இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். தொழிலாளர்கள் மருத்துவ வசதிக்கு தனியார் அல்லது ஒரே ஒரு இ.எஸ்.இ.சி. மருத்துவமனை மட்டுமே இருந்தது. இதனால், முக்கிய மருத்துவ சேவைகளை தொழிலாளர்கள் பெற முடியாத நிலையில், இ.எஸ்.ஐ.சி. மருத்துவமனை குறித்த கோரிக்கை எழுந்தது. இதைத் தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூரில் இ.எஸ்.ஐ.சி. மருத்துவமனை கட்ட மத்திய தொழிலாளர் வேலைவாய்ப்பு துறை அமைச்சகம் முடிவு செய்து இதற்கான நிலத்தை ஒதுக்கித்தரும்படி தமிழக அரசிடம் மத்தியஅரசு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வல்லம் வடகல். கிராமத்தில் 5.12 ஏக்கர் நிலம் ஓதுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இப்பகுதியில் ரூ.155 கோடியில் புதியதாக 100 படுக்கைகள் கொண்ட இ.எஸ்.ஜ.சி. மருத்துவமனை அமைப்பதற்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு & சுற்றுச்சூழல்,வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தின் மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் மத்திய தொழிலாளர் வேலைவாய்ப்பு மற்றும் பெட்ரோலியத் துறை இணையமைச்சர் ராமேஸ்வர் தேலி முன்னிலையில் இன்று அடிக்கல் நாட்டினார்.
புதிதாக கட்டப்படும் இம்மருத்துவமனையினால் காஞ்சிபுரம், ஒரகடம், படப்பை, திருமுடிவாக்கம், பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள தொழிலாளர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்ட சுமார் 8 லட்சம் பேர் பயனடைய உள்ளனர்.
மேலும் அவசர சிகிச்சைப் பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவு, அல்ட்ரா சவுண்ட்ஸ்கேனர் போன்ற நவீன சிகிச்சை வசதிகள் மற்றும் பல் மருத்துவம், ஆயூஸ், பொது மருத்துவம், புறநோயாளிகளுக்கான சிகிச்சை பிரிவு உள்பட அனைத்து விதமான மருத்துவ வசதிகளுடன் இம்மருத்துவமனை அமைய உள்ளது.
தற்போது ரூ.155 கோடியில் புதிதாகக் கட்டப்பட உள்ள ஸ்ரீபெரும்புதூர் மருத்துவமனையானது மத்திய தொழிலாளர் நலத்துறையின் இ.எஸ்.ஐ.சி. நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அடிக்கல் நாட்டு விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் எம்.ஆர்த்தி, வல்லம் வடகால் ஊராட்சி மன்ற தலைவர் விமலாதேவி தர்மா, காஞ்சிபுரம் மாவட்ட பிஜேபி தலைவர் கே.எஸ்.பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.