கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நச்சலூர் வ.உ.சி நகர் பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன்(57). இவர் இந்திய இராணுவத்தில் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். முன்னதாக மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்த நிலையில், பதவி உயர்வு பெற்று கடந்த மே மாதம் 1ஆம் தேதி குஜராத் மாநிலத்தின் மெயின் சிட்டி எல்லை பாதுகாப்பு படையின் அலுவலக பணியில் உதவி துணை ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில், நேற்று முன்தினம் காலை நடைப்பயிற்சியின் போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனே, அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வாசுதேவனை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் அவர் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். அதனையடுத்து, அவரின் குடும்பத்துக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த வாசுதேவனுக்கு பரிமளா(45) என்ற மனைவியும், சோனாலி(24), ஆர்த்தி(21) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்தநிலையில் குஜராத்தில் வாசுதேவன் உடலுக்கு ராணுவ வீரர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செய்தனர். பிறகு தனி ஹெலிஹாப்டரில் அவரின் உடல், கோயம்புத்தூர் வரை கொண்டு வரப்பட்டு, பின்னர் அங்கிருந்து ராணுவ வாகனம் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு வாசுதேவனின் வீட்டில் வைத்து அவருக்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவரின் உடல் நச்சலூர் கடைவீதி வழியாக ஊர்வலமாக மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, குளித்தலை எம்.எல்.ஏ இரா.மாணிக்கம் மற்றும் ராணுவ எல்லைப் பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் ஜோசப் தேவசியா முன்னிலையில் ராணுவ வீரர்கள் மரியாதை செலுத்தினர். அதன் பிறகு 18 குண்டுகள் முழங்க அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.