தமிழ்நாடு அரசுக்கு உதவ இளைஞர்களை தேர்ந்தெடுக்கும் முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்திற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டு இருந்தது. இதில் இளைஞர்களுக்கு தொழில்முறை மற்றும் கல்வி அடிப்படையில் இரண்டு ஆண்டு காலம் ஊக்க ஊதியத்துடன் பயிற்சி வழங்கப்படுவதுடன், தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் முதலமைச்சர் அலுவலகத்தில், தமிழக அரசின் முதன்மை திட்டங்களை செயல்படுத்தும் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்திட்டத்திற்காக திருச்சி பாரதிதாசன் பல்கலையுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
முதலமைச்சரின் புத்தாய்வு திட்டம்
1. இளைஞர்களை தேர்வு செய்யும் பணி வெளிப்படையான மற்றும் நியாயமான முறையில் நடைபெறும்.
2. தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்களுக்கு மாதம் ரூ.65,000 ஊதியமும் ரூ.10,000 கூடுதல் படியும் வழங்கப்படும்.
3. இளைஞர்களின் செயல்திறனை மதிப்பீடு செய்து அடிப்படையான வழிகாட்டுதல் வழங்கப்படும்.
4. இளைஞர்களுக்குள் போட்டி மனப்பான்மையை உருவாக்கி தகுதியான செயல்திறன் வளர்க்கப்படும்.
5. பயிற்சியை நிறைவு செய்யும் இளைஞர்களுக்கு முதலமைச்சர் அலுவலகம், முக்கிய துறைகளில் திட்டங்களை செயல்படுத்தும் பணி ஒதுக்கப்படும்.
முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று, அரசுப் பணிகளில் அமர விரும்பும் இளைஞர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. http://www.bim.edu/Tncmpf எனும் இணையதளத்தில் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.
தொழில்கல்வி படிப்புகளில் இளங்கலை பட்டத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி மற்றும் தமிழ் மொழி பயன்பாட்டு திறன் கட்டாயம் ஆகியவை இத்திட்டத்தில் சேர கல்வித்தகுதியாக வகுக்கப்பட்டுள்ளது. 22 முதல் 30 வரை வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கு 35 வயது வரையும், பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 33 வயது வரை வயது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
கணினி அடிப்படையில் முதல்கட்ட தேர்வும், எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு என மூன்று கட்ட தேர்வுகளின் மூலம் இளைஞர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மே 25ஆம் தேதி முதல் ஜூன் 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் ஜூலை 2 ஆம் வாரத்தில் நேர்முகத்தேர்வு நடைபெறும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
திறன்மிகு இளைஞர்களின் திறமைகளை பயன்படுத்தி நிர்வாக செயல்முறைகள் மற்றும் சேவை வழங்கலின் செயல்படுத்துதலை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முதலமைச்சரின் இந்த புத்தாய்வு திட்டத்திற்காக நடப்பாண்டில் 30 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது. மேலும் இந்த திட்டத்திற்கு ரூ.5.66 கோடி ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.