திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வேண்பாக்கம் பள்ளம் பகுதியில் ஜவஹர் என்ற பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட ஜவஹர் மீது 2 கொலை வழக்குகள், போதைப்பொருள் தடுப்பு வழக்கு என பல்வேறு குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளது. இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டில் கஞ்சா வைத்திருந்ததாகவும், நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததாகவும் கார்த்திக் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான ஜவஹரை காவல் துறையினர் தேடி வந்தனர். இதனையடுத்து, வேம்பாக்கம் பள்ளம் பகுதியில் கத்தியால் குத்தியும், வெட்டியும் ஜவஹரை கொடூரமாக மர்மநபர்கள் கொலை செய்து பின் தப்பிச் சென்றுள்ளதாக தெரிகி்றது. கொலை குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொன்னேரி காவல் துறையினர், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் ஆகியோர் விசாரணை நடத்தினர். முன் விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து ஜவஹரின் சடலத்தை மீட்ட காவல் துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, கொலையாளிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.