காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன்(36). இவர் வடசென்னை அனல் மின் நிலைய 2ஆவது நிலையில் உதவிப் பொறியாளராக பணியாற்றி வரும் இவர், அனல்மின் நிலைய அதிகாரிகள் குடியிருப்பில் தங்கி வேலை பார்த்துவிட்டு, வார இறுதி நாட்களில் மட்டும் வீட்டிற்கு சென்று வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்தநிலையில், நேற்று மாலை அனல் மின் நிலைய அதிகாரிகள் ஹரிகிருஷ்ணனின் மனைவிக்கு போன் செய்து, ஹரிகிருஷ்ணன் வீட்டிற்கு வந்தாரா என கேட்டுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த ஹரிகிருஷ்ணன் மனைவி இளவரசி வேலையில் இருந்து வீட்டிற்கு வரவில்லை என தெரிவித்ததுடன் உடனடியாக அனல் மின் நிலையத்திற்கு நேரில் வந்து விசாரித்துள்ளார். அப்போது, நேற்று வேலைக்கு வந்தவர் திடீரென காணாமல் போனதாக, அனல்மின் நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இளவரசி மீஞ்சூர் காவல் நிலையத்தில் காணாமல் போன தனது கணவரை கண்டுபிடித்து தருமாறு புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மீஞ்சூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, காணாமல் போன உதவிப் பொறியாளரை கண்டுபிடித்து தருமாறும், வேலைக்காக வந்தவர் எங்கு சென்றார் என்பது மர்மமாக இருப்பதுடன், அனல் மின் நிலைய அதிகாரிகள் தரப்பில் முறையாக பதிலளிக்கவில்லை எனவும் கூறி அவரது குடும்பத்தினர் அனல் மின் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில், ”பணிச்சுமையின் காரணமாக மன அழுத்தம் தாங்காமல் இங்கு மேற்கொண்டு பணியினை தொடர முடியவில்லை எனவும், குடும்பத்தாருடன் என்னால் நேரம் செலவழிக்க முடியவில்லை, எனது குடும்பத்தை விட்டு பிரிகிறேன், இதற்கு யாரும் காரணம் இல்லை” என ஹரிகிருஷ்ணன் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை அனல்மின் நிலையத்தில் இருந்து கைப்பற்றியதாக அதிகாரிகள் மீஞ்சூர் காவல் துறையினரிடம் அளித்துள்ளனர். இந்த கடிதத்தில் இருப்பது ஹரிகிருஷ்ணன் கையெழுத்து கிடையாது என அவரது குடும்பத்தினர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கின்றனர். இதனிடையே, அனல் மின் நிலையத்தின் 2ஆவது மாடியில் ஹரிகிருஷ்ணன் தூக்கிட்ட நிலையில் சடலமாக இருப்பதாக வந்த தகவலையடுத்து காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர். அங்கு ஹரிகிருஷ்ணனின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே உறவினர்கள் அனல் மின் நிலையத்தின் முன்பு தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.