திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட புது வள்ளூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மற்றும் ராஜன் ஆகியோர் தங்களின் மூதாதையர்களுக்கு சொந்தமான சுமார் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 30 ஏக்கர் நிலம் உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலத்தை கிருஷ்ணன் மற்றும் ராஜனின் உறவினர்களான 13 பேர் இணைந்து போலியாக தயாரித்து அபகரிக்க முயன்றதாக மணவாளநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால், புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து சகோதரர்கள் ஆத்திரமடைந்துள்ளனர். இதனையடுத்து, சகோதரர்கள் இருவரும் திருவள்ளூர் மாடட்ட ஆட்சியர் அலுவலக வாளாகத்தின் உள்ளே மண்ணெண்ணை கேனுடன் வந்தனர். பின்னர், உடம்பில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துகொள்ள முயன்றனர். இதனையடுத்து, அங்கு செய்திசேகரிக்கச் சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் உடனடியாக தீக்குளிக்க முயன்றவர்கள் கையில் வைத்திருந்த மண்ணெண்ணை கேனை பிடுங்கி உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படாமல் தடுத்து நிறுத்தினார். இந்தநிலையில், தகவலறிந்து வந்த திருவள்ளூர் நகர காவல் துறையினர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, மண்ணெண்ணை ஊற்றிக்கொண்டவர்கள் மீது தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்த பிறகு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளிக்கப்பட்டது. சகோதரர்கள் இரண்டு பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.