கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம் பனஞ்சேரி பகுதியில் மேற்கு நைல் காய்ச்சல், க்யூலெக்ஸ் வகை கொசுக்களால் பரவி வருவதாக கண்டறிப்பட்டுள்ளது. இந்த வகை காய்ச்சலால் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்த மாநில சுகாதாரத்துறை மூலம் எச்சரிக்கை செய்யப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதனையடுத்து, உயிரிழந்த நோயாளி வசித்து வந்த கண்ணாரா பகுதிக்கு திருச்சூர் மாவட்ட மருத்துவ சிறப்புக் குழு சென்று நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது. இதனுடன் திருச்சூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பட்டு உள்ளது. இதேவேளையில், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”வெஸ்ட் நைல் காய்ச்சலைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு எடுத்து வருவதால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை. தற்காப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட வேண்டும், கொசுக்களை அழிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், தண்ணீர் தேங்கி நிற்கக் கூடாது. காய்ச்சல் அல்லது நோயின் பிற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பொதுமக்கள் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும்” என கேரள மாநில மக்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.